| திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் | 
| ஆறாம் திருமுறை | 
| 6.80 திருமாற்பேறு (திருமால்பூர்) - திருத்தாண்டகம் | 
| பாரானைப் பாரினது பயனா னானைப் படைப்பாகிப் பல்லுயிர்க்கும் பரிவோன் றன்னை
 ஆராத இன்னமுதை அடியார் தங்கட்
 கனைத்துலகு மானானை அமரர் கோனைக்
 காராருங் கண்டனைக் கயிலை வேந்தைக்
 கருதுவார் மனத்தானைக் காலற் செற்ற
 சீரானைச் செல்வனைத் திருமாற் பேற்றெஞ்
 செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.
 
 | 1 | 
| விளைக்கின்ற நீராகி வித்து மாகி விண்ணோடு மண்ணாகி விளங்கு செம்பொன்
 துளைக்கின்ற துளையாகிச் சோதி யாகித்
 தூண்டரிய சுடராகித் துளக்கில் வான்மேல்
 முளைக்கின்ற கதிர்மதியு மரவு மொன்றி
 முழங்கொலிநீர்க் கங்கையொடு மூவா தென்றுந்
 திளைக்கின்ற சடையானைத் திருமாற் பேற்றெஞ்
 செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.
 
 | 2 | 
| மலைமகள்தங் கோனவனை மாநீர் முத்தை மரகதத்தை மாமணியை மல்கு செல்வக்
 கலைநிலவு கையானைக் கம்பன் றன்னைக்
 காண்பினிய செழுஞ்சுடரைக் கனகக் குன்றை
 விலைபெரிய வெண்ணீற்று மேனி யானை
 மெய்யடியார் வேண்டுவதே வேண்டு வானைச்
 சிலைநிலவு கரத்தானைத் திருமாற் பேற்றெஞ்
 செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.
 
 | 3 | 
| உற்றானை உடல்தனக்கோர் உயிரா னானை ஓங்காரத் தொருவனையங் குமையோர் பாகம்
 பெற்றானைப் பிஞ்ஞகனைப் பிறவா தானைப்
 பெரியனவும் அரியனவு மெல்லாம் முன்னே
 கற்றானைக் கற்பனவுந் தானே யாய
 கச்சியே கம்பனைக் காலன் வீழச்
 செற்றானைத் திகழொளியைத் திருமாற் பேற்றெஞ்
 செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.
 
 | 4 | 
| நீறாகி நீறுமிழும் நெருப்பு மாகி நினைவாகி நினைவினிய மலையான் மங்கை
 கூறாகிக் கூற்றாகிக் கோளு மாகிக்
 குணமாகிக் குறையாத உவகைக் கண்ணீர்
 ஆறாத ஆனந்தத் தடியார் செய்த
 அனாசாரம் பொருத்தருளி அவர்மே லென்றுஞ்
 சீறாத பெருமானைத் திருமாற் பேற்றெஞ்
 செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.
 
 | 5 | 
| மருவினிய மறைப்பொருளை மறைக்காட் டானை மறப்பிலியை மதியேந்து சடையான் றன்னை
 உருநிலவு மொண்சுடரை உம்ப ரானை
 உரைப்பினிய தவத்தானை உலகின் வித்தைக்
 கருநிலவு கண்டனைக் காளத் தியைக்
 கருதுவார் மனத்தானைக் கல்வி தன்னைச்
 செருநிலவு படையானைத் திருமாற் பேற்றெஞ்
 செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.
 
 | 6 | 
| பிறப்பானைப் பிறவாத பெருமை யானைப் பெரியானை அரியானைப் பெண்ணா ணாய
 நிறத்தானை நின்மலனை நினையா தாரை
 நினையானை நினைவோரை நினைவோன் றன்னை
 அறத்தானை அறவோனை ஐயன் றன்னை
 அண்ணல்தனை நண்ணரிய அமர ரேத்துந்
 திறத்தானைத் திகழொளியைத் திருமாற் பேற்றெஞ்
 செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.
 
 | 7 | 
| வானகத்தில் வளர்முகிலை மதியந் தன்னை வணங்குவார் மனத்தானை வடிவார் பொன்னை
 ஊனகத்தில் உறுதுணையை உலவா தானை
 ஒற்றியூர் உத்தமனை ஊழிக் கன்றைக்
 கானகத்துக் கருங்களிற்றைக் காளத் தியைக்
 கருதுவார் தருத்தானைக் கருவை மூலத்
 தேனகத்தி லின்சுவையைத் திருமாற் பேற்றெஞ்
 செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.
 
 | 8 | 
| முற்றாத முழுமுதலை முளையை மொட்டை முழுமலரின் மூர்த்தியை முனியா தென்றும்
 பற்றாகிப் பல்லுயிர்க்கும் பரிவோன் றன்னைப்
 பராபரனைப் பரஞ்சுடரைப் பரிவோர் நெஞ்சில்
 உற்றானை உயர்கருப்புச் சிலையோன் நீறாய்
 ஒள்ளழல்வாய் வேவவுறு நோக்கத் தானைச்
 செற்றானைத் திரிபுரங்கள் திருமாற் பேற்றெஞ்
 செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.
 
 | 9 | 
| விரித்தானை நான்மறையோ டங்க மாறும் வெற்பெடுத்த இராவணனை விரலா லூன்றி
 நெரித்தானை நின்மலனை அம்மான் றன்னை
 நிலாநிலவு செஞ்சடைமேல் நிறைநீர்க் கங்கை
 தரித்தானைச் சங்கரனைச் சம்பு தன்னைத்
 தரியலர்கள் புரமூன்றுந் தழல்வாய் வேவச்
 சிரித்தானைத் திகழொளியைத் திருமாற் பேற்றெஞ்
 செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.
 
 | 10 | 
| திருச்சிற்றம்பலம் |